அரசாணைப்படி தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் டாக்டர் அம்பேத்கர், அண்ணா, தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை உடனடியாக வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறாமல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முதல்வருக்கு ஆட்சியர் அனுப்பிய மனு தொடர்பாக பதில் வரும் இங்கேயே காத்திருக்க போவதாக கூறி காத்திருக்கின்றனர்.இது குறித்து பேசிய ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கூறிம் போது : கடந்த 1978 மற்றும் 1990-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின்படி, அரசு அலுவலகங்களில் டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராஜர் ஆகிய தலைவர்களின் படங்களை கட்டாயம் வைக்க வேண்டும். இக்கோரிக்கை தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அளிக்கப்பட்ட மனுவை, கடந்த மே 18-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை, தலைவர்களின் படங்களும் வைக்கப்படவில்லை. கொள்கைத் தலைவர்களைக் காட்டி வாக்கு சேகரித்து ஆட்சிக்கு வந்த நிலையில், முதலமைச்சரின் படங்கள் மட்டும் ரேஷன் கடை முதல் தலைமைச் செயலகம் வரை அனைத்து இடங்களிலும் உடனடியாக வைக்கப்படுகின்றன. ஆனால், சமூக நீதிக்காக உழைத்த தலைவர்களின் படங்களை வைக்க அரசு தாமதம் காட்டி வருகிறது. டெல்லி போன்ற பிற மாநிலங்களில் அம்பேத்கர், பகத் சிங் போன்ற தலைவர்களின் படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைப்பினர், தமிழக அரசு உடனடியாக இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியேறப்போவதில்லை எனத் தெரிவித்தார்.
