திருநெல்வேலி இருப்புப் பாதை காவல் சரகத் தனிப்படை காவலர்களான பொன் தனசேகரன் மற்றும் தளவாய் ஆகியோர் இன்று (செப்டம்பர் 19) சென்னை எழும்பூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தைக் கடந்து மணியாச்சி அருகே வந்து கொண்டிருந்தபோது, முன்பதிவில்லாத முன்பக்க பொதுப் பெட்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த கருப்பு நிற டிராவல் பேக்கை அவர்கள் சோதனையிட்டனர். அந்தப் பையில் ரூ. 5,544 மதிப்பிலான 22 புதுச்சேரி மாநில தயாரிப்பு பிராந்தி மதுபாட்டில்கள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த தனிப்படையினர், கடத்தலில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் குமாரெட்டியாபுரம், ஏ. ராமலிங்கபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் பாண்டீஸ்வரன் (38) என்பவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களும் திருநெல்வேலி இருப்புப் பாதை காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து ரயில்வே சார்பு ஆய்வாளர் சதீஷ் விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கைக்காக மதுவிலக்கு அமல் பிரிவிடம் ஒப்படைத்தார்.
