Skip to content

பிளஸ்2 தேர்வு இன்றுடன் நிறைவு….. மே 5ம் தேதி ரிசல்ட்

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேரும், தனித்தேர்வர்கள் 23 ஆயிரத்து 747 பேரும் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் மொழிப்பாடங்களில் மட்டும் சுமார் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதாதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயம் சட்டசபை வரை எதிரொலித்தநிலையில், தேர்வை எழுதாத மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை துணைத்தேர்வில் பங்கேற்கவைக்க கல்வித்துறை அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்  பிளஸ்2  பொதுத்தேர்வு இன்றுடன் (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. பொதுத்தேர்வின் கடைசி நாளான இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகள் வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வை எழுதுகிறார்கள்.

இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 48 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த மாதம் (மே) 5-ந் தேதி வெளியிடப்பட இருப்பதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை மறுதினம் (புதன்கிழமை) முடிவடைய உள்ளது. இந்த தேர்வை பள்ளி மாணவர்கள் 7 லட்சத்து 88 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்கள் 5 ஆயிரத்து 300 பேரும் எழுதுகின்றனர். நாளை மறுதினம் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் உள்பட 9 பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இவர்களைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வருகிற 6-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 20-ந் தேதி (வியாழக் கிழமை) வரை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!