Skip to content

கலாஷேத்ரா ஹரிபத்மன்….. வக்கிர சேட்டைகள் …போலீஸ் காவலில் எடுக்க முடிவு

சென்னை கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன், கேரள மாணவியின் பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹரிபத்மன், தன்னிடம் அத்துமீறி பேசியதாகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இதுதொடர்பாக அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய ஆதாரங்களை திரட்டினர். இதைத்தொடர்ந்தே ஹரி பத்மன் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது.

கேரள முன்னாள் மாணவி அளித்த புகாரில் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என்பதும், ஹரிபத்மன் காதல் மன்னனாக வலம் வந்ததும் விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. முன்னாள் மாணவியின் தோழிகள் 5 பேரிடம் கேரளாவில் நடத்தப்பட்ட விசாரணையும், அவர்கள் அளித்துள்ள பரபரப்பு சாட்சியங்களுமே ஹரி பத்மனை வசமாக சிக்க வைத்துள்ளது. கேரள மாணவியிடம் ஹரிபத்மன் தகாத முறையில் பேசியது பற்றிய விவரங்களை 5 மாணவிகளும் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்கள்.

நான் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறேன். வீட்டுக்கு வருகிறாயா? என்று கேட்டு ஹரிபத்மன் சல்லாப முயற்சியில் ஈடுபட்டதும், கழிவறைக்கு சென்று விட்டு திரும்பியபோது யாருடன் இருந்துவிட்டு வருகிறாய்? என்று மாணவியிடம் ஹரிபத்மன் கேட்டதும் உண்மைதான் என்று மாணவியின் தோழிகள் தெரிவித்துள்ளனர். இது போன்று பல மாணவிகளிடம் ஹரிபத்மன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதுதொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனனர். ஹரிபத்மன் மாணவிகளிடம் எப்படி நடந்து கொள்வார்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது பேச்சுக்கு கட்டுப்படாத மாணவிகளை பழி வாங்கும் வகையிலும் ஹரிபத்மன் நடந்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. வெளியில் நிகழ்ச்சிகளுக்காக அழைத்துச் செல்லும்போது தேவையில்லாமல் பேசி மனக்கஷ்டத்தை ஏற்படுத்துவதையும், கடைசி நேரத்தில் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பேராசிரியர் ஹரிபத்மன் உடல் ரீதியாக தொல்லை கொடுக்கும் எண்ணத்திலேயே மாணவிகளுடன் ஆபாசமாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுவும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஹரிபத்மனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கோர்ட்டில் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளனர். ஹரிபத்மனை காவலில் எடுத்து விசாரிக்கும்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரிபத்மனைப்போல மேலும் பல புள்ளிகள் மாணவிகளிடம் அத்துமீறி உள்ளதாகவும் அவர்களை காப்பாற்றும் முயற்சியிலேயே  நிர்வாகம் பல  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் மாணவிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!