கடலூர் மத்திய சிறையில் ஏராளமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திண்டிவனத்தில் ஒரு கொள்ளை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரியைச் சேர்ந்த அமீர் அப்துல் காதர் ( 22) என்ற கைதி, கடலூர் மத்திய சிறையில் கடந்த மாதம் முதல் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அப்துல் காதர் காவல்நீட்டிப்புக்காக நேற்று பிற்பகல் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நேற்றிரவு மீண்டும் அவரை கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரும்போது, அப்துல் காதர் கடலூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து போலீசாரை ஏமாற்றிவிட்டு கை விலங்குடன் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர். கைதியை அழைத்துச்சென்ற 2 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
