டில்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் டில்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்கிடையே, செப்டம்பர் 9-ம்தேதி அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த விருந்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக நாளை மறுநாள் (சனிக்கிழமை) டில்லி புறப்பட்டு செல்கிறார். ஏற்கனவே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த விருந்தில் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.