Skip to content

திருச்சியில் குட்டிக்குடி திருவிழா….பக்தர்கள் பரவசம்

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் ஆறு கண் பாலம் அருகில் அமைந்து உள்ளது குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டிக் குடி  திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த பிப்ரவரி 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 26ம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் இரவு காளியாவட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க தேரில் புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் இன்று காலை வெகு விமரிசையாக  தொடங்கியது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். அம்மனின் அருள் பெற்ற மருளாளியை (சாமி ஆடுபவர்) பக்தர்கள் மேளதாளம் முழங்க தோளில் தூக்கி வந்தனர். அப்போது கொம்பு உள்ளிட்ட வாத்தியங்களும் இசைக்கப்பட்டது.

பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்திருந்த ஆடுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மந்தைக்கு முன் உள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும்  மருளாளியிடம்  ஆடுகள் ஒவ்வொன்றாக தூக்கி கொடுக்கப்பட்டது. மருளாளி அவற்றின் கழுத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். இதையே குட்டி குடித்தல் என்கிறார்கள். முதலில் அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆட்டு குட்டியின் ரத்தத்தை குடித்தார்.அதைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை குடித்தார். இதைப்பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

குட்டி குடித்திருவிழாவை முன்னிட்டு  500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை மறுநாள் சாமி குடிபுகுதலுடன் விழா நிறைவு பெறுகிறது

குட்டிக்குடி திருவிழாவையொட்டி புத்தூர் பகுதி முழுவதும் பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கத்தினர் சார்பில் வழி நெடுங்கிலும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.இதனால் புத்தூர், உறையூர் பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!