Skip to content
Home » துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தால் விரட்டியடித்த வீரப்பெண்

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை துடைப்பத்தால் விரட்டியடித்த வீரப்பெண்

  • by Senthil

புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீர தமிழ்ப்பெண் என்பார்கள். அந்த வம்சத்தை சேர்ந்த பெண்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை அரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்  நிரூபித்து உள்ளது. அந்த பெண்  புலியை விரட்டவில்லை.  சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்திய 2 வாலிபர்களை  துடைப்பத்தால் விரட்டி அடித்தார்.

அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோ காட்சிகள்  மூலம் இதை நாம் தெரிந்து கொள்ளலாம்.  இந்த காட்சி  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவின் படி, தெருவொன்றில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி  இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் சரமாரியாக சுடும் பகீர் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

தான் துப்பாக்கியால் சுடப்படுவதை உணர்ந்ததும், தெருவில் நின்று கொண்டிருந்த நபர் அருகில் இருந்த வீட்டிற்குள் ஓடிச் செல்கிறார். துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டதும் எதிர் வீட்டில் இருந்த பெண் கையில் துடைப்பக்கட்டையுடன் வேகமாக ஓடிவந்தார்.  துப்பாக்கி வைத்திருந்தவர்களை நோக்கி ஓடிவந்த பெண், அவர்களை நோக்கி துடைப்பக்கட்டையை வீசினார். இதை கண்ட மர்ம நபர்கள் துப்பாக்கியுடன்   அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபரின் பெயர் ஹரிகிருஷ்ணன் என்றும் இவர் குத்துச்சண்டை வீரர் ரவி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. இவருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஹரிகிருஷ்ணன் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். மர்ம நபர்கள் சுட்டதில் ஹரிகிருஷ்ணன் உடலில் நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கி சூடு நடத்திய இருவர் மற்றும் அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற இருவரையும் போலீசார் சி.சி.டி.வி. வீடியோ காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!