கோவை, சூலூர் அருகே செட்டிபாளையத்தில் போலீசார் இரவு வந்து சென்ற போது ரவுடி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை சோதனை செய்த போது அவரிடம் அரிவாள் மற்றும் கத்தி இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்களது அறையில் வீச்சரிவால், பட்டாக் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
துணிச்சலுடன் செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.
கோவை, செட்டிபாளையம் காவல் நிலைய போலீசார்
தலைமை காவலர் பிரபாகரன் , காக்கி பீட் அலுவலர் கனகராஜ், ஆகியோர் கடந்த புதன்கிழமை நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான மூன்று பேரை பார்த்து உள்ளனர். அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர். சந்தேகம் அடைந்து அவர்களை சோதனை செய்த போது அவர்களிடம் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் தங்கி இருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்று பார்த்த போது அது கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த விடுதி என தெரியவந்தது.
இதனை அடுத்து இவர்களுக்கு தங்க அனுமதி அளித்தவர்கள் இடம் விசாரித்த போது கல்லூரி மாணவர்களது சீனியர் மாணவர்கள் தங்களது நண்பர்கள் வருவார்கள் அவர்களை இரண்டு நாள் தங்க வைக்குமாறு கூறியதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக துணிச்சலுடன் இரண்டு காவலர்களும் மாணவர்களின் அறையில் சோதனை செய்தனர். அப்போது அதிபயங்கரமான பட்டா க்கத்தி மற்றும் வீச்சருவாள், ஸ்குரு டிரைவர் மற்றும் பேனாக் கத்தி உள்ளிட்ட பல பொருள்கள் இருந்தது கண்டுபிடித்து அவற்றை கைப்பற்றினர். மேலும் அங்கு இருந்த 2 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.
அப்போது பிடிபட்ட மூன்று பேரில் ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை துரத்தி பிடித்து மல்லுக்கட்டி அவரை துணிச்சலுடன் கைது செய்தனர். இது சம்பந்தமாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை விசாரித்த போது மதுரையைச் சேர்ந்த கருப்புசாமி (24), சந்தோஷ் குமார் (20), பிரவீன் (19) என தெரியவந்தது. மேலும் கருப்புசாமி மீது கொலை முயற்சி, வீடு உடைத்து திருடுதல், வழிப்பறி ஆகிய 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
சந்தோஷ் குமாருக்கு திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. பிரவீனுக்கு திருட்டு வழக்கு மற்றும் கொடுமையான ஆயுதம் வைத்து இருந்த வழக்கு உள்ளிட்டவை நிலவையில் உள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் இவர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரை கொடுமையான ஆயுதங்களுடன் நள்ளிரவில் துரத்த உள்ளனர். இதில் அந்த மாணவர் தப்பி ஓடியதும் பிடிபட்டவர்கள் இந்த மாணவரை தேடி வந்து இருந்ததும் தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இரவு நேரத்தில் கொடுமையான ஆயுதங்கள் வைத்து இருந்த நிலையில் இரவு நேர ரோந்து பணியில் இருந்த காவலர்கள் துணிச்சலுடன் ஆயுதங்கள் மற்றும் குற்றவாளிகளை பிடித்தது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்து உள்ளார். இது குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.