கோவையில் இன்று பள்ளி சீரமைப்பு மண்டல மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். முன்னதாக அமைச்சர் மகேஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு தேவையான ஆதார் அட்டை, பெற்றோரின் வருமான சான்று, நேட்டிவிட்டி சர்ட்டிபிகேட், சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் பள்ளிகளிலேயே வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களை அலைக்கழிக்க கூடாது என சொல்லி இருக்கிறோம். இன்று பெற்றோர்களை ெகாண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம். இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பெற்றோர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இது 4வது மாநாடு. அடுத்த மாநாடு காஞ்சிபுரத்தில் நடக்கிறது. இதுவரை பள்ளிக்கல்வித்துறையில் 52 வகையான திட்டங்கள் கொண்டு வந்து உள்ளோம். அதை பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களையும் அழைத்து உள்ளோம்.
பல நன்கொடை யாளர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். மதுரை ஆயி அம்மாள் என்கிற பூரணம் அம்மாள் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை பள்ளிக்கு நன்கொடை கொடுத்து உள்ளார். இந்த 4 மாவட்டங்களில் மட்டும் இதுவரை ரூ.448 கோடிக்கான நன்கொடைகளை பெற்றோர்கள் வழங்கி உள்ளனர். அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 20 வருடங்களுக்கு முன்னர் நன்கொடை கொடுத்தவர்களையும் இங்கு பாராட்டுகிறோம். சிலர் 1 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக கொடுத்து உள்ளனர்.
முதல்வரின் ஊக்கத்தால் இந்த மாநாடு சிறப்பாக நடந்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் மகேஷ் கூறினார்.