திருச்சி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் பால் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றி ஆவின் முகவர்களிடம் கேட்டால் பால் உற்பத்தி குறைந்து விட்டது. 60 % தான் சப்ளை தரப்படுகிறது என கூறுகிறார்கள். அதே நேரத்தில் தனியார் பால் உற்பத்தியாளர்களுக்குஆதரவாக ஆவின் உற்பத்தியை குறைத்து விட்டதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆவின் பால் தட்டுப்பாடு இன்றி வழங்க கோரி இன்று திருச்சியில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். தட்டுப்பாடு இல்லாமல் உரிய நேரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் பால் நிறுவனங்கள் லாபம் அடைய வழி செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில், காலி பால் புட்டியுடன் கண்டன போராட்டம் நடைபெற்றது.
பாலக்கரை பகுதி செயலாளர் சோலை ராஜன் தலைமையில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில், மாவட்டத் தலைவர் லெனின், மாவட்ட செயலாளர் சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.