கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு அபிஷேகம் மற்றும் வெள்ளிக்கவச அலங்காரம்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு இன்று நந்தி பகவானுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப்பொடி, அரிசிமாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. பின்னர் உதிரி பூக்களால் சிவாச்சாரியார் நாமாவளிகள் கூறினார். அதை தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கார்த்திகை மாத சோமவார பிரதோஷ விழாவை காண ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

