Skip to content
Home » ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி

ஈரோடு அருகே வேன் மோதி……கல்லூரி மாணவி, தம்பியுடன் பலி

 

ஈரோடு மாவட்டம் பெரிய கொடிவேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஞான சவுந்தர்யா (22) என்ற மகளும், கிருஷ்ணமூர்த்தி (19) என்ற மகனும் உள்ளனர்.

ஞான சவுந்தர்யாவுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

ஞான சவுந்தர்யா தனது கணவர் அசோக் என்பவருடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் வசித்து வந்தார். திருமணமாகிய நிலையில் ஞான சவுந்தர்யா அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டும் படித்து வந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது அக்கா ஞான சவுந்தர்யாவை பெரியகொடிவேரியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் குமாரபாளையம் சென்று உள்ளார்.

பின்னர் கிருஷ்ணமூர்த்தி ஞான சவுந்தர்யாவை அழைத்து கொண்டு குமாரபாளையத்தில் இருந்து பவானி-சத்தியமங்கலம் சாலை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ஆப்பக்கூடல் போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே சத்தியமங்கலம்-பவானி சாலை நோக்கி வந்த பிக்கப் வேன் ஒன்று கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கிருஷ்ணமூர்த்தி சாலையில் விழுந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஞான சவுந்தர்யா சாலையோரம் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் விபத்தில் பலியான கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனையடுத்து பவானி அரசு மருத்துவமனையில் விபத்தில் உயிரிழந்த அக்கா, தம்பி உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!