திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்துவதற்காக, திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீஸார், ஆண்டர்சன்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். இதையறிந்த புரட்சி பாரதம் கட்சியினர் அவரது வீட்டு முன்பு திரண்டனர். அவர்கள், போலீஸாரை வீட்டுக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது.
இதற்கு அனுமதி அளித்து, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிபதி வேல்முருகன் முன்பு ஜெகன்மூர்த்தி தரப்பு வழக்கறிஞர் முறையிட்டார்.
இந்த மனு இன்று காலை நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனு விசாரணையை இன்று மதியம் 2.30 மணிக்கு தள்ளிவைத்தார். மேலும் ஜெகன்மூர்த்தி இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும், ஆள் கடத்தலுக்கு உதவியதாக கூறப்படும் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமனும் ஆஜராகவேண்டும் என்றும் உத்தரவிட்டார். கூடுதல் டி.ஜி.பி.ஜெயராமன் ஆஜராகவில்லை என்றால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.