அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்படுகிறது.
அத்துடன் நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்தும் ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதால், அண்ணாமலையை கண்டிக்கும் வகையில் அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே நாளைய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நிர்வாகிகள் காரசார விவாதம், பேச்சு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.