சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டியில் கூறியதாவது…. அமமுகவில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே அ.தி.மு.க.வுக்கு சென்று உள்ளனர். பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். அவர்களை வரச்சொல்லியிருக்கிறேன். அதிமுகவினர் எங்கள் கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க முடியும். அ.ம.மு.க. வீரர்களின் பட்டாளம். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. சின்னம் இருந்தாலும், எதிர்வரும் தேர்தலில் எந்த பலனும் அ.தி.மு.க.வுக்கு இருக்காது. கட்சி தொடங்கி 5 ஆண்டுகளாகிறது. 2 தேர்தல்கள் எங்களுக்கு பின்னடைவு தான். இருந்தாலும் தொண்டர்களும், நிர்வாகிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். மார்ச் 23 ஆம் தேதி வரை நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. 2 மாவட்டச் செயலாளர்கள் அ.தி.மு.க.வுக்கு சென்றதால் அ.ம.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க.வை கைப்பற்றுவோம் என்று கூறிய தினகரன் தற்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரே என்று சிலர் கேட்கிறார்கள். அ.தி.மு.க. இன்று தவறானவர்கள் கையில் உள்ளது. பி.எஸ்.வீரப்பா கையிலும், எம்.என்.நம்பியார் கையிலும் புரட்சி தலைவரின் சின்னமும் கட்சியும் உள்ளது.
எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் போராடுவோம். நீங்கள் பலமுறை கேட்டுள்ளீர்கள். அதிமுக-வுடன் இணைவீர்களா? என்று அதற்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்யமாட்டோம். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் சேர்ந்து சரியான கூட்டணி அமைத்து போட்டியிட்டால் திமுகவை வீழ்த்தலாம், வரும் நாடாளுமன்றத்திலும், சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அம்மாவின் ஆட்சி அமைக்கலாம் என கூறினார்.