முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் கல்லணை சுற்றுலா மாளிகையில் டெல்டா மாவட்ட கலெக்டர்களை சந்தித்தார்.
திருச்சி கலெக்டர் பிரதீப் குமார்,தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன், மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த், நாகை கலெக்டர் ஆகாஷ், புதுக்கோட்டை கலெக்டர் அருணா மற்றும் வேளாண் துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
டெல்டா பகுதிகளில் தூர்வாரப்பட்டதன் விவரங்கள் குறித்தும், சாகுபடி விவரங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், தட்டுப்பாடு இன்றி, உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதை நெல் ஆகியவை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவையான அளவு இடுபொருட்கள் இருக்கிறதா என கேட்டார். தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடவும் அறிவுறுத்தினார்.
பின்னர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்குள்ள நோயாளிகளிடம், நலம் விசாரித்து சிகிச்சை குறித்து விசாரித்தார்.
சிகிச்சை சிறந்த முறையில் அளிக்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பின்னர் டீன் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், உள்மருத்துவ அதிகாரி செல்வம் ஆகியோரிடம் மருத்துவமனை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், தஞ்சை பாலாஜி நகரில் உள்ள முன்னாள் எம்பி, எல்.கணேசன் வீட்டுக்கு சென்று, நலம் விசாரித்தார்.