பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே நீண்ட நாட்களாக இருந்த தகராறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழுவில் அனைவருக்கும் தெரியவந்தது. அதன்பிறகு கடந்த மே மாதம் 11ம் தேதி நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டிலும் அன்புமணி, ராமதாஸ் இடையே உள்ள சண்டை வெளிப்பட்டது.
இந்த நிலையில் தைலாபுரத்தில் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இதனை பெரும்பாலான நிர்வாகிகள் புறக்கணித்தனர். அதன்பிறகு சோழிங்கநல்லூரில் அன்புமணி நடத்திய கூட்டத்தில் பாமக நிர்வாகிகள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அன்புமணிக்கு நெருக்கமானவர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். தானே கட்சித்தலைவர் எனக்கூறி இந்த நடவடிக்கையை எடுத்தார். அதற்கு அன்புமணி நான், பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர், என்னை யாரும் நீக்க முடியாது.
ராமதாசால் நீக்கப்பட்டவர்களுக்க 10 நிமிடத்தில் நியமன உத்தரவு வழங்குவனே் என பொருளாளர் திலகபாமா உள்பட பலருக்கு நியமன உத்தரவுகளை வழங்கினார் அன்புமணி. இப்படியாக தந்தை மகன் மோதல் போக்கு நீண்டுகொண்டே போகிறது.
இந்த மோதலுக்கு கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே. மணி தான் காரணம் என திலகபாமா கூறினார். இதுபற்றி ஜி.கே. மணியிடம் கருத்து கேட்டபோது அவர் மனவேதனையுடன், நான் தலைமறைவாக எங்காவது போய்விடலாம் , அல்லது தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன் என்றார்.
இந்த சூழ்நிலையில் இன்று காலை அன்புமணி, தைலாபுரம் வந்து ராமதாசை 45 நிமிடம் சந்தித்து பேசினார். அப்போது அன்புமணி மகளும், ராமதாசின் மகளும் உடனிருந்தனர். என்ன பேசினார்கள் என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த அன்புமணியிடம் இதுபற்றி கேட்டபோது, அவர் கும்பிட்டபடியே சென்று விட்டார். எதுவும் சொல்லவில்லை.
அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தியது தான் இந்த மோதலுக்கு ாகரணம எ கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 8ம் தேதி மதுரை வருகிறார். அங்கு அவர் பாஜக நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசிக்க இருக்கிறார். கூட்டணி கட்சித்தலைவர்களையும் சந்திக்கலாம் என இருக்கிறார். குறிப்பாக அன்புமணி, ராமதாஸ் ஆகியோரை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
எனவே தந்தை, மகன் இடையே சமரசம் செய்ய பாஜக மேலிடம் விரும்புகிறது. பாஜகவின் தூதுவராக இன்று10.30 மணி அளவில் ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும்தைலாபுரம் வந்தனர். அவர்கள் ராமதாசை சந்தித்து பேசினர். இவர்கள் பாஜகவின் சமாதான தூதுவராக வந்ததாக கூறப்படுகிறது.
அன்புமணி சென்றபிறகு இவர்கள் ராமதாசை சந்தித்து உள்ளனர். பாஜக மேலிட உத்தரவுபடி இந்த இரு சந்திப்புகளும் நடந்ததாக தெரிகிறது.
