கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் போலி தங்கட்டிகளை கொடுத்து தங்கநகைகளை வாங்கி ஏமாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரை பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார்.வி.எஸ்.ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்திவருகிறார். இவருக்கு தெரிந்த இதே பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் கடந்த ஜூன்.23 ஆம்தேதி வந்து தன்னை இருவர் சந்தித்ததாகவும்,தங்களிடம் 380 கிராமில் தங்கக் கட்டி வைத்திருப்பதாகவும்.அதனை விற்க தெரிந்த நபர்கள் இருந்தால் கூறுமாறு கேட்டனர். அதில் ஒரு தங்கக் கட்டி தன்னிடம் உள்ளது.விருப்பமிருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். உதயகுமாரும் அதனை வாங்கி சோதனை செய்ததில் அது அசல் தங்கக் கட்டி என தெரிந்து அந்த தங்கக்கட்டிகளை வாங்கிவரவும் பணம் கொடுத்துவிடலாம் எனக் கூறியுள்ளார்.இதுகுறித்து சரண்யா சம்பந்தப்பட்ட இருவரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த இருவர் மறுநாள் சரண்யாவைச் சந்தித்து 380 கிராம் தங்க கட்டிகளைக் கொடுத்து ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர்.சரண்யாவும் உதயகுமாரிடம் வந்து தங்கக் கட்டிகளை கொடுத்துவிட்டு பணம் கேட்டுள்ளார்.அப்போது தன்னிடம் கையில் பணம் இல்லை என்பதால் அவரிடம் இருந்த சுமார் 61/2 பவுன் தங்க நகைகளைக் தந்து சரண்யாவிடம் இருந்த 1 பவுன் தங்க செயினை வாங்கி இதனைச் சேர்த்து கொடுத்துவிடுங்கள்.பணத்தைக் கொடுத்தப்பின்னர் நகைகளை திருப்பி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.சரண்யாவும் நகைகளைக் கொண்டுபோய் இருநபர்களிடம் கொடுத்துளார்.அவர்களும் அதனைப்பெற்றுச் சென்றுவிட்டனர்.
அதன்பின்னர் உதயகுமார் தங்க கட்டிகளைச் சோதித்து பார்த்தபோது அது போலி என்று தெரிய வந்ததுள்ளது.இதனையடுத்து இவரும் ,சரண்யாவும் அந்த நபர்களை பற்றி பல இடங்களில் விசாரித்தும்,தேடியும் பார்த்துள்ளனர்.ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை,.இந்நிலையில் தங்களை ஏமாற்றியவர்களைக் கண்டுபிடித்து விசாரித்து தனது நகைகளை மீட்டுத் தரகோரி உதயகுமார் பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீஸார் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் கனகசபாபதி தலைமையில் காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன்,உதவி ஆய்வாளர் நமச்சிவாயம்சிறப்பு உதவி ஆய்வாளர் சசிகுமார் மற்றும் காவலர்கள் அருண்,அருண்குமார்,சதீஷ் உள்ளடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர்.இதற்கிடையில் வெள்ளிக்கிழமை சாமநாயக்கன்பாளையம் அருகே வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினர்.தொடர் விசாரணையில் இருவரும் ஆந்திரா,குண்டூர்,சட்டேனிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ்(45).அவரது மனைவி காமாட்சி(35) என்பதும் ,இருவரும் சரண்யாவிடம் போலி தங்கக் கட்டிகள் கொடுத்து ஏமாற்றி நகைகளை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.இருவரிடமிருந்தும் போலி தங்ககட்டிகள் மற்றும் 6½ பவுன் நகை மற்றும் 1 பவுன் தங்க செயின் ஆகிய மீட்கப்பட்டன..விசாரணைக்குப் பின்னர் போலீஸார் இருவரையும் கோவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனர்.
விசாரணையில் போலி தங்கக்கட்டியில் ஒரு இடத்தில் குயிக் பிஸ் பசையை வைத்து உண்மையான தங்கம் ஒட்டவைத்து அதை சரண்யா முன்னிலையில் உடைத்து தருவது போல் கொடுத்துள்ளனர். அதை ஆய்வு செய்ததில் தங்கம் என்று தெரிந்தால் உண்மை என நம்பி ஏமாந்தது தெரியவந்துள்ளது. இதுபோன்று புது விதமான மோசடி கும்பல் உலா வருவதால் எச்சரிக்கையாக இருக்க போலீசார் வேண்டுகோள்.
