Skip to content
Home » ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

ஆஸி., ல் இருந்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை மீட்பு…கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு..

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொட்டவெளி வெள்ளூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் திருட்டு போனதாக கடந்த 2012-ம் ஆண்டு செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு காவல்துறை இயக்குநர் உத்தரவின் பேரில் இந்த சிலை திருட்டு வழக்கின் புலன் விசாரணை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில், செந்துறை வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட ஐம்பொன் சிலைகளில் ஒன்றான ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு அங்கிருந்து ஏலம் விடப்பட்டது தெரியவந்தது.

மேலும் அந்த ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டறிந்தனர்.
இதையடுத்து வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருட்டு போன ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும், கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலையின் புகைப்படத்தையும், தொல்லியல் துறை நிபுணர்களுடன் உதவியோடு ஒப்பீடு செய்து பார்த்தபோது, இரண்டு புகைப்படங்களிலும் இருப்பது ஒரே சிலை என்பது உறுதியானது.

எனவே, கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை பொட்டவெளி வெள்ளூர் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலை தான் என்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் உறுதி செய்தனர். பின்னர் அந்த சிலையை மீட்க காவல்துறை தலைமை இயக்குநர் மூலம் மத்திய அரசின் உள்துறைக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டது.

சம்பந்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை ஏலம் எடுத்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த தனிநபர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் தொடர் சட்ட நடவடிக்கைகள் காரணமாக சம்பந்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்திரேலியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தார். தொடர்ந்து இந்திய அரசின் உள்துறை, இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஆஸ்திரேலியாவில் இருந்த ஆஞ்சநேயர் சிலை ஏஜென்சிகளின் பரிசோதனைக்கு பிறகு இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 17-ம் தேதி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் டெல்லி சென்ற தனிப்படை போலீஸார் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை இந்திய தொல்லியல் துறையிடம் இருந்து பெற்று சென்னை கொண்டு வந்தனர்.

இந்த சிலையை சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் ஒப்படைத்தனர். அப்போது நீதிபதி இந்த சிலையை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்க உத்தரவி்ட்டார். இதையடுத்து ஐம்பொன் ஆஞ்சநேயர் சிலை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!