பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் இருந்து போட்டிகள் தொடங்கியது. கலெக்டர் க.கற்பகம் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.
மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இப் போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
13 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரையிலும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகம் வரை சென்று மீண்டும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சென்றடையும் வகையிலும், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி வரையிலும் என மூன்று பிரிவுகளாக மிதிவண்டிப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இன்று நடைபெற்ற மிதிவண்டிப் போட்டியில் மாணவர்களுக்கு காவல்துறையின் சார்பில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது, ஒவ்வொரு போட்டி குழுவினரையும் விளையாட்டு துறையின் சார்பில் விளையாட்டு ஆசிரியர்கள் வழிநடத்திச் சென்றனர், மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுடன் சுகாதாரத்துறையின் சார்பில் அவசரகால ஊர்தியும் உடன்சென்றது.
போட்டிகளின் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் முதல் நபருக்கு ரூபாய் 5000 மதிப்பிலும் இரண்டாம் நபருக்கு ரூபாய் 3000 மதிப்பிலும் மூன்றாம் நபருக்கு ரூபாய் 2000 மதிப்பிலுமான பரிசுத்தொகையினையும், நான்காவது முதல் பத்தாம் இடம் வரை வரும் நபர்களுக்கு தலா ரூபாய் 250 வீதம் பரிசுத்தொகையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் செய்திருந்தார். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.