Skip to content
Home » மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

மாநில அளவில் 10ம் வகுப்பு தேர்வில் அரியலூர் மாவட்டம் முதலிடம்.. கலெக்டர் மகிழ்ச்சி..

அரியலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 5035 மாணவர்கள் 4737 மாணவிகள் என மொத்தம் 9772 மாணாக்கர்கள் தேர்வு எழுதினர். அதற்கான தேர்வு முடிவு இன்று பள்ளி கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 97.31% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இதில் 96.41% மாணவர்களும் 98.35% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது அரியலூர் மாவட்ட கல்வியாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா, செய்தியாளர்களை சந்தித்தபோது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டல் கையேடு முக்கிய காரணமாகும். இந்த கையேட்டில் தேர்விற்கு வரக்கூடிய முக்கிய வினாக்கள் அதற்கான விடைகள் இருந்ததோடு, அதனை எவ்வாறு மாணவர்கள் கற்க வேண்டும் என்பது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் அவ்வப்போது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் கல்வியில் பின்தங்கிய மாணாக்கர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும் எடுக்கப்பட்டு, அவர்களும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவே மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்த தேர்ச்சி விகிதத்தை வரக்கூடிய கல்வி ஆண்டிலும் தக்க வைத்துக் கொள்ள இவ்வாண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!