அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியம் குழுமூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், (கும்ப) லிட், திருச்சி மண்டலம், அரியலூர் கிளை சார்பில் புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப குழுமூர் முதல் சென்னை வரை புதிய பேருந்து வழித் தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்படி அரியலூர் – சென்னை (வழி) செந்துறை, குழுமூர், அங்கனூர், பெண்ணாடம், விருத்தாச்சலம், உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் – தினசரி 2 நடைகள் இயக்கப்படும். இந்த பேருந்து வழித்தடத்தின் மூலம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குழுமூர், அங்கனூர், தளவாய், பெண்ணாடம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சென்னைக்கு நேரடி பேருந்து வசதி கிடைக்கப்பெற்று பயனடைவார்கள். எனவே, இப்பேருந்து வசதியினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, கோட்ட மேலாளர் ராமநாதன், அரியலூர் கிளை மேலாளர் குணசேகர், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.