அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் பள்ளிகள், சாலை, குடிநீர் தேவைகள், நியாய விலைக்கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.
அதன்படி செந்துறை ஊராட்சி ஒன்றியம் தளவாய் ஊராட்சி ஈச்சங்காடு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பகுதிநேர நியாயவிலைக்கடையினை திறந்து வைத்து, முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார். பின்னர் அசாவீரன்குடிகாடு ஊராட்சியில் ரூ.22,00,000 மதிப்பில் புதிய நூலக கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து,
பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவாக கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து அசாவீரன்குடிகாடு கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக்கடை கட்டடத்தினை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் பெரியாக்குறிச்சி கிராமத்தில் ரூ.39,95,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கிராம செயலக கட்டடத்தினையும், தொடர்ந்து பெரியாக்குறிச்சி ஊராட்சி, இலைகடம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.28,00,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டடத்தினையும், அதனைத்தொடர்ந்து வஞ்சினபுரம் ஊராட்சியில் ரூ.13,57,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தினையும் மக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கங்காதாரிணி, கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் தீபாசங்கரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, செந்துறை ஒன்றியக்குழூத்தலைவர் தேன்மொழிசாமிதுரை, செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர்உசைன்இ ஊராட்சிமன்றத் தலைவர்கள்இ உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.