கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, குடலாயூத்தூர், காவாளக்கடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 16க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்று சேர்ந்து வாடகை வேனில் இன்று காலை திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலில் வழிபாடுகள் முடிந்த பின் தங்களது சொந்த ஊர்களுக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் அருகே வந்த பொழுது, திடீரென வேனின் டயர் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலை தடுமாறி, தலைகுப்புற கவிழ்ந்து சாலையின் ஓரத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. வேனில் பயணித்த பெண் பக்தர்கள் அலறிய சத்தம் கேட்டு
உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அவர்கள்
விபத்தில் சிக்கிய பெண் பக்தர்களை மீட்டு, 108 வாகனம் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்பரசி, காவ்யா, சரிதா, சரஸ்வதி, மகேஸ்வரி, மாரியம்மாள், சௌமியா, ஜான்சி ராணி, செல்வி, கலைச்செல்வி உள்ளிட்ட 14 பெண் பக்தர்கள் படுகாயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை பெரம்பலூர் அருகே ஏற்பட்ட விபத்தில் நான்கு பக்தர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது வேன் கவிழ்ந்து பெண் பக்தர்கள் படுகாயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

