தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில் தாமதம் காட்டுவதாகக் கூறி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை யை வரும் 20ம் தேதி(திங்கள்) ஒத்திவைத்தது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரலின் உதவியை நாடியது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்கள் கவர்னர் ஆர்.என்.ரவி அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினார்.
கவர்னர் ரவியிடம் சுமார் 20 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணை 20ம் தேதி வர உள்ள நிலையில் , வர இருக்கும் விசாரணையின்போது கவர்னிடம் மசோதாக்கள் பெண்டிங்கில் இருப்பதை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டிக்கும்என அனைவரும் எதிர்பார்த்தனர்.
அந்த இக்கட்டான நிலையை தவிர்க்க கவர்னர் ரவி இன்று 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அந்த மசோதாக்கள் தொடர்பாக சில விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் 20ம் தேதி வழக்கு வர உள்ள நிலையில் 18ம்தேதி(சனிக்கிழமை ) தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்ட அரசு முடிவு செய்துள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.