தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பதவி ஏற்றது. இதில் பால்வளத் துறை அமைச்சராக நாசர் பதவி ஏற்று இயங்கி வந்தார். நாசர் பதவி ஏற்புக்கு பிறகு ஆவின் பால் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டன. இதையடுத்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசரை அதிரடியாக நீக்கினார். இதையடுத்து டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அத்துடன் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே நாசர் கலந்து கொண்டு வந்தார்.
இந்நிலையில் பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.