இந்தூர் கல்லூரியில் நடந்த மாணவர் நிகழ்ச்சியில் புகுந்து பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். மத்தியப் பிரதேசம் இந்தூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் கல்விப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக வியாபாரத் திறனை வளர்க்க அவ்வப்போது விற்பனை கூடங்களை அமைப்பது வழக்கம். கடந்த காலங்களில் காதலர் தினத்தை ஒட்டி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட போது சில அமைப்புகள் பல்வேறு எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தன. இந்நிலையில் நேற்று காதலர் தின வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் பூக்கள் மற்றும் கரடி பொம்மைகளை விற்பனை செய்யும் சிறப்பு சந்தையை கல்லூரி வளாகத்தில் அமைத்தனர். அப்போது மதியம் 12.30 மணியளவில் காந்தி நகர் பகுதியில் உள்ள கல்லூரிக்குள் பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி நுழைந்தனர்.
இந்த நிகழ்ச்சி ‘ஆபாசத்தை தூண்டுவதாகவும், இந்து கலாசாரத்திற்கு எதிரானது’ எனவும் கூறி அவர்கள் முழக்கமிட்டனர். அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் மேஜைகளை அடித்து உடைத்த கும்பல், வளாகத்திலேயே அமர்ந்து அனுமன் சாலிசா பாடி ரகளையில் ஈடுபட்டதால் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். பல்கலைக்கழக நிர்வாகம் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

