Skip to content
Home » லிவ் இன் முறையில் வாழ்ந்த பெங்களூரு ஏர்ஹோஸ்டஸ் கொலை? காதலனிடம் விசாரணை

லிவ் இன் முறையில் வாழ்ந்த பெங்களூரு ஏர்ஹோஸ்டஸ் கொலை? காதலனிடம் விசாரணை

இமாச்சலபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் அர்ச்சனா திமென் (வயது 28). இவர் சர்வதேச விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார்.  அர்ச்சனாவுக்கு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் கேரளாவை சேர்ந்த ஆதேஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியரான ஆதேஷ் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அர்ச்சனாவுக்கும் ஆதேஷுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

அர்ச்சனாவும், ஆதேஷூம் கடந்த சில மாதங்களாக லிவ் இன் முறையில் திருமணம் செய்யாமல் கணவன் – மனைவியாக வாழ்ந்துள்ளனர். இவருக்கும் இடையே அவ்வப்போது சிறுசிறு வாக்குவாதங்களும், பிரச்சினைகளும் நிலவி வந்துள்ளது. இந்நிலையில், விமானப்பணிப்பெண்ணான அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் இருந்து பெங்களூரு வந்துள்ளார்.

அவர் தனது காதலன் ஆதேஷூடன் பெங்களூருவின் கோரமங்கலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.  இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்றுள்ளனர். தியேட்டருக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது அர்ச்சனாவுக்கும் ஆதேஷூக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், இரவு 12 மணியளவில் அர்ச்சனா தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். அவரை மீட்ட ஆதேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த அர்ச்சனா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அர்ச்சனாவின் லிவ் இன் காதலன் ஆதேஷை கைது செய்தனர். அர்ச்சனா 4வது மாடியில் இருந்து கீழே குதித்தாரா? அல்லது அர்ச்சனாவை ஆதேஷ் கீழே தள்ளி கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!