கொலை செய்யப்பட்ட பீகார் மாநில தம்பதியர் மற்றும் குழந்தையின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில், “பீகார் மாநிலத்திலிருந்து வேலை தேடி சென்னைக்கு வந்த தம்பதியர் கவுரவ்குமார் அவரது மனைவி புனிதாகுமாரி மற்றும் அவரது 2 வயது குழந்தை ஆகியோர் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்களால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் சென்னை மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட 3 பேரின்உடல்களையும் அவர்களது சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல உதவி தேவைப்படுகிறது என்ற செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி, அவர்களது உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

