மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதாவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் நாகை மாலி எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் எஸ்.ராஜகுமார் எம்எல்ஏ ஆகியோர் வேட்பாளரை ஆதரித்து பேசினர்.
கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது: உள்ளாட்சிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெற்று பெண்கள் மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். ஆனால் மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்யும் தீர்மானம் கொண்டுவந்தபோது அதனை நிறைவேற்றிவிட்டு, 2036-ஆம் ஆண்டுதான் அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்று அறிவித்த பெண்களுக்கு எதிரான அரசு பாஜக அரசு.
பாமக எந்த கொள்கையின் அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்பது தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக கூறும் அதிமுகவினர் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என்று எண்ணுகின்றனர். அதற்கு சில சிறுபான்மையினர் அணியினரும் துணை போகின்றனர். சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்திருந்தால் அப்போது அதனை நடைமுறைப்படுத்தி இருக்க முடியாது. அதைவிடுத்து, தற்போது கூட்டணியைவிட்டு வெளியேறி விட்டோம் என்று கூறுகின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்குப்பின் இபிஎஸ், ஒபிஎஸ் ஆகியோர் மோடிக்கு காவடித்தூக்கி 4 ஆண்டுகள் ஆட்சியை தக்கவைத்தனர். தற்போது டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர். அதேபோல் பாஜக தீபத்தில் அதிமுக விரைவில் கலக்க போகிறது. அதிமுக தொண்டர்களை பழனிச்சாமி ஏமாற்றி வருகிறார். வலுவான கூட்டணியை அமைக்கக் கூட அதிமுகவால் முடியவில்லை. இந்த தேர்தலில் அதிமுக, பாமகவுக்கு அளிக்கும் வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கே போகும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இக்கூட்டணி வெற்றி பெற்றதும் அரைமணி நேரத்தில் முடிவு செய்து அறிவிப்போம் என்றார்.