சென்னை அண்ணாநகர் முகப்பேர் , ஜேஜேநகர், கோபாலபுரம், பாரீஸ் ஆகிய இடங்களில் உள்ள 4 பள்ளிகள் உள்பட பல பள்ளிகளுக்கு இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பள்ளி நிர்வாகங்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் 4 பள்ளிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுப்பட்டுள்ளன. இதனால் மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து பள்ளி வளாகங்களில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பெற்றோர்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என சென்னை மாநகர போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால் பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு பள்ளிகளில் குவிந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளை தேடி வகுப்பறைக்குள் புக முயன்றனர். அவர்களை சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் மேற்கண்ட பள்ளிகள் உள்ள பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.