திருச்சி கருமண்டம் ஆர்எம்எஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று மாலை 5 மணி அளவில் சிவக்குமாரின் மனைவி ஜெயலட்சுமி(42) அருகில் உள்ள தங்கள் பேக்கரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் பைக்கில் வந்தார். அவர் ஹெல்மட் அணிந்து இருந்தார். அவருக்கு 30 வயது இருக்கும். அவர் ஜெயலட்சுமியை கடந்த சென்ற நிலையில் மீண்டும் திரும்பி வந்து, ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்றார்.
ஜெயலட்சுமி கூச்சல் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் பைக்கில் ஓ- பாலம் வழியாக தப்பி சென்றார். இது குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஜெயலட்சுமியிடம் செயின் பறித்த நபர், வழக்கமாக செயின் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் போல தெரிவதாகவும், மிகவும் லாவகமாக அவர் பறித்து சென்றதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். கருமண்டபம் பகுதியில் இதுபோல பல முறை செயின் பறிப்பு நடந்து வருவதாகவும், போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கூறினர்.
செயின் பறிப்பு கொள்ளையனின் படம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அவரது முகம் தெளிவாக தெரிவதால் கொள்ளையனை விரைவில் பிடித்து விடுவார்கள் என தெரிகிறது.