Skip to content
Home » நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்

நாமக்கல்……..செயின்பறிப்பு திருடர்களுடன் போராடிய ஆசிரியை படுகாயம்

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி-கபிலர்மலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி ஜோதி (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் காலையில் தனது மொபட்டில் பரமத்தி-திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடைக்கு இறைச்சி வாங்குவதற்காக சென்றார். பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அர்த்தனாரிபாளையம் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜோதியை துரத்தினர். மர்மநபர்கள் வேகமாக மொபட் அருகில் சென்று ஜோதி அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தனர். உடனே சுதாகரித்துக் கொண்ட ஜோதி தாலி செயினை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டு மர்மநபர்களிடமிருந்து போராடியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இருப்பினும் மர்மநபர்கள் அவரை விடவில்லை. சாலையில் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த அவரை சரமாரியாக தாக்கி ஜோதியிடம் இருந்து பாதி செயினை மர்மநபர்கள் பறித்துக்கொண்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டு வருவதை கண்டதும் மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி தலைமறைவாகி விட்டனர். இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஜோதியை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் வழிப்பறி கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ நடந்த பகுதியிலும் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!