ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும்.
தண்ணீர் திறப்பு தாமதமானால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த ஆண்டு மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி இலக்கை மிஞ்சி நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி அணை திறப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இதனால் குறுவை சாகுபடி அதிக அளவு நடைபெறும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோடை நெல் சாகுபடி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல், உரம் மற்றும் இடுபொருட்கள் தேவையான அளவு வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் 25 வேகன்களில் 1,459 டன் யூரியா உரம் நேற்று தஞ்சைக்கு வந்தது. இந்த உரமூட்டைகள் தஞ்சையில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.