தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகின்ற 10ஆம் தேதி கரூர் வருகை முன்னிட்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கான மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம் – சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் ஆய்வு.
தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் வருகின்ற 10-ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக தவெக மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் 41 குடும்பங்களை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்கும் நிகழ்ச்சியை அடுத்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக கரூர், வெண்ணைமலை

அடுத்துள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளின் படி 5000 பேர் பங்கேற்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் 5000 பேர் பங்கேற்கும் வகையிலான ஏற்பாடுகளே செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி அன்பு காவல் துறை உயரதிகாரிகளுடன் பார்வையிட்டு வருகிறார். குறிப்பாக கட்சி நிர்வாகிகள் சார்பாக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான ஆயத்த பணிகள் குறித்தும், 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் 5000 பேர் பங்கேற்கும் வகையிலான பந்தல் அமைத்தல், மக்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை விளக்கி கூறி வருகின்றனர்.
முன்னதாக கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுதாரர்கள் சிலருக்கு முதல்வர் விஜய் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி அரசு நிகழ்ச்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்கனவே ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
