Skip to content
Home » முதல்வரின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் ஜனாதிபதி…. சென்னை திரும்பினார் கவர்னர்..

முதல்வரின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பினார் ஜனாதிபதி…. சென்னை திரும்பினார் கவர்னர்..

தமிழக சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு விரிவாக ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தி.மு.கழக எம்.பி.க்கள் டில்லியில் நேரில் சந்தித்து கொடுத்தார்கள். தமிழக கவர்னர் அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், தமிழக அரசுடன் ஒருவகை அரசியல் கருத்தியல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி ஆவன செய்வதாக அவர்களிடம் தெரிவித்தார். அதன்படி தமிழக முதல்-அமைச்சரின் அந்த கடிதத்தை நேற்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்தார். அதனுடன் சில குறிப்புகளை ஜனாதிபதி இணைத்து அனுப்பி இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது.  இந்தநிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச்சென்றார். அவருடைய மனைவியும் உடன் சென்றிருந்தார். அவர்கள் தமிழக அரசின் பொதிகை இல்லத்தில் தங்கினார்கள். தமிழக அரசியலில் கவர்னர் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது டெல்லி பயணம் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தன. இதற்கிடையே கவர்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார். டெல்லியை ஒட்டிய காசியாபாத் நகரில் அவருடைய உறவினரின் இல்லத் திருமண விழாவில் மட்டுமே கவர்னர் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!