திமுக இளைஞரணி செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1977 ம் ஆண்டு நவம்பர் 27 ம் நாள் பிறந்தவர். முதலில் சினிமாவில் ஆர்வம் காட்டிய அவர் 2018 ம் ஆண்டு முதல் கட்சிப் பணியில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலிலும், அப்போது நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் தீவிரமாக பிரச்சாரம் செய்து கட்சித் தொண்டர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார்.
அதைத் தொடர்ந்து 2019 ம் ஆண்டு ஜூலை மாதம் 7 ம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து திமுகவின் வெற்றிக்காக பாடுபட்டார். திருவல்லிக்கேணி –
சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்தகட்ட உயர்வாக அவருக்கு 2022 டிசம்பர் 14ம் தேதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அவருக்கு வழங்கப்பட்டது. உலக சதுரங்கப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி நல்ல பெயர் வாங்கினார்.
அதைத்தொடர்ந்து மெல்ல மெல்ல கட்சியிலும், ஆட்சியிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு இணையான அதிகாரம் படைத்தவராக மாறினார் உதயநிதி. முதல்வர் செல்ல இயலாத ஆய்வுக் கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் அவர் செல்ல ஆரம்பித்தார். முதல்வருக்கு இணையான மரியாதை ஆட்சி நிர்வாகத்திலும் கட்சியிலும் அவருக்கு கிடைத்து வருகிறது.
திமுக மாநில இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரணி நிர்வாகிகளும் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர். உதயநிதிக்கு நேரில் வாழ்த்துச் சொல்வதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் இளைஞரணி, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் மூலம் கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கவும் திமுகவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.