கோவை சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீது காவல்துறை தரப்பில் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களுக்கான கோவை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
கடந்த மாதம் 21 ஆம் தேதி கோவை சூலூர் அடுத்த பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சம்பவம் நடந்த மறுநாள் 22 ஆம் தேதி சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கார்த்திக் மற்றும் அவருடன் இருந்த மோகன்ராஜ் என இருவர் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை செய்த காவல்துறையினர் இருவரையும் கடந்த வாரம் மூன்று நாட்கள் காவல் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற இடம்,சிறுமியின் சொந்த ஊர், அவரது உறவினர்கள், பிரேத பரிசோதனை அறிக்கை, தடையவியல் ஆய்வறிக்கை,தொலை தொடர்பு சாதன உபயோகம் என பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களுக்கான முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகளான கார்த்திக் மற்றும் மோகன் ராஜிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இருவரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.தொடர்ந்து குற்ற பத்திரிக்கை நகல்களை இருவரிடமும் வழங்கிய நீதிபதி ஏற்கனவே இருவருக்கும் நாளைவரை நீதிமன்ற காவல் உள்ளதால் நாளை பிற்பகல் மீண்டும் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறும் அப்போது இது குறித்த விசாரணை தொடங்கும் என்றும் தெரிவித்தார். இதை அடுத்து ஆஜர் படுத்தப்பட்ட இருவரும் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
