அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், உத்திர பிரதேச மாநிலத்தில் அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நடத்தப்பட்ட தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்கம் வென்ற அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எல்.யோபின், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால், 2025-26 ஆம் கல்வியாண்டு, அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் தடகளப் போட்டிகள் 13.12.2025 முதல் 17.12.2025 வரை உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. இத்தடகளப் போட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் விளையாட்டு விடுதியில் தங்கி, அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் எல்.யோபின் நீளம் தாண்டுதல் போட்டியில் கலந்துகொண்டு 6.96 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கும், அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதை தொடர்ந்து பதக்கம் மற்றும் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமியிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். மாணவருக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி பாராட்டினார்.
இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் என்.லெனின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மா.ரேணுகோபால், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கவிதா, அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

