தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற முகாம் இன்று திருச்சி மாவட்டத்தில் நடந்தது. இதையொட்டி காலையில் திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் முசிறி சென்றார். அங்குள்ள ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த மாணவர்களிடம் அவர் தனித்தனியாக விசாரித்தார். எந்த வகுப்பு படிக்கிறீர்கள், விடுதியில் எதுவும் குறைகள் உள்ளதா, உணவு தரமாக இருக்கிறதா, சரியான வேளைக்கு உணவு கிடைக்கிறதா என கேட்டார்.
பின்னர் காவிரி ஆற்றில் உள்ள முசிறி நகராட்சி தலைமை நீர் சேமிப்பு நிலையம், நீர்த்தேக்கத் தொட்டி
ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி, நகராட்சி தலைவர் கலைச்செல்வி , நகராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து முசிறி அருகே உள்ள பொன்னாங்கண்ணிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். பல குழந்தைகள் பள்ளிக்கு வருகை தராமல் இருப்பதை பார்த்த கலெக்டர் ஏன் இத்தனை குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை, எத்தனை நாட்களாக வரவி்ல்லை என ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் கேட்டார். அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்காததால், வருகைப்பதிவேட்டை வாங்கி ஆய்வு செய்தார். அதில் பல நாட்களாக குழந்தைகள் வருகைப்பதிவு இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்து, இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கலெக்டர் கேட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.