திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவு தொழிலாளியான இவர்இந்த பகுதி நகர காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் இருந்தார் . இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு கணபதி, பார்த்திபன், ராஜசேகர் என 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர் வீட்டில் இரவு அனைவரும் உறங்கி விட்ட பின்பு வீட்டில் உள்ள நெசவுத்தூள் எந்திரங்கள் மூலம் இரவு முழுவதும் நெசவு வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் வீட்டில் இவர் காலையில் இல்லை என்று இவரது மனைவி சிவகாமி தேடி உள்ளார்.
வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது ராஜேந்திரன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்தம் வெளியேறி படுகொலை செய்யப்பட்டுள்ளது கண்டு இவரது மனைவி அலறல் சத்தம் கேட்டு அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஆர்.கே. பேட்டை போலீசுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் பிரேதத்தை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திரன் வீட்டருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதை அவ்வப்போது தட்டி கேட்டுள்ளார். எனவே கஞ்சா போதை இளைஞர்கள் தான் இந்த படுகொலைக்கு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து திருவள்ளூர் எஸ்பி சீனிவாச பெருமாள் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.