திருப்பத்தூர் கோட்டை தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு தங்கக் கவச அலங்காரம் சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
புரட்டாசி மாதம் தொடங்கி முதல் சனிக்கிழமையையொட்டி, கோயில் கருவறையில் வீற்றிருக்கும் வரதராஜ பெருமாளுக்கு தங்கக் கவசம் சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், நட்சத்திர தீபம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வரதராஜ பெருமாள் கோயில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மற்றும் மார்கழி மாதங்களில் ஏகாதசி உள்ளிட்ட முக்கிய நாட்களில்

இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து வரதராஜ பெருமாளை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக ஆலய நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
