சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் ஆய்வு செய்த பின்பு தவெக சார்பில் கேட்கப்பட்ட 3 இடங்களில் ஆய்வு செய்தனர்.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும்

வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் நேற்று சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தனர்.
மேலும் இந்த வழக்கில் சிபிஐ இதுவரை விசாரணை செய்த தரவுகளை நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், மத்திய மண்டல ஐஜி ஜோசி நிர்மல் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா மற்றும் காவல்

துறை அதிகாரிகள் நேரில் பல மணி நேரமாக துயர சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர்கள், பொதுமக்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என 30-க்கு மேற்பட்ட நபர்களிடம் இருந்து மனுக்கள் நேரடியாக பெறப்பட்டது.
இன்று இரண்டாவது நாளாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவினர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் முதன் முறையாக விசாரணை கண்காணிப்பு குழுவினர், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளான சுமித்சரண், சோனல் வி மிஸ்ரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர்.
குறிப்பாக தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடமான உழவர் சந்தை, லைட் ஹவுஸ் கார்னர், மனோரா கார்னர் உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

