16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் சென்னைக்கு நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது.
5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கினாா். இதனால் மைதானத்தில் சென்னை அணி ரசிகர்கள் ஆரவாரம் விண்ணைபிளந்தது. அதே நேரத்தில் மைதானத்தில் திரண்டிருந்த குஜராத் அணியின் ரசிகர்கள் நெஞ்சம் படபடக்க தொடங்கியது. அடுத்த பந்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் பந்து, என்ன நடக்க
போகிறதோ என மைதானத்தில் திரண்டிருந்தவர்கள் மட்டுமல்ல, டிவி மூலம் பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்கள் இதயமும் சற்று வேகமாக துடித்தது. அப்போது அவுட்டாகி பெவிலியனில் இருந்த கேப்டன் டோனி, ஜடேஜாவையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.
கடைசி பந்தை தேவையான பவுண்டரிக்கு ஜடேஜா விரட்டி அடித்து, வெற்றியை உறுதிப்படுத்தினார். பந்து பவுண்டரி எல்லைக்கு வந்து விடும் என்பதை உறுதிபடுத்திக்கொண்ட டோனியின் முகத்தில் வெற்றி புன்னகை தெரிந்தது. அப்போது சென்னை வீரர்கள் பெவிலியனில் இருந்த பாய்ந்து மைதானத்திற்குள் சென்றனர். டோனியும் ஓடிச்சென்று ஜடேஜாவை தூக்கி தனது மகிழ்ச்சியையும், பாராட்டையும் பகிர்ந்தார்.
2 மாதமாக ஆடிய ஆட்டத்தின் முத்தாய்ப்பாய் வெற்றிக்கனி பறித்து தந்தவர் என்ற பெயர் பெற்றார் ஜடேஜா. ஜடேஜாவை கட்டிப்பிடித்த டோனி ஆனந்த கண்ணீர்விட்டார். அவரது கண்கள் கலங்கியது. அதே நேரத்தில் அவர் வெற்றிக்காக ஆர்ப்பரிக்கவில்லை.
எதிரணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் கைகொடுத்து ஆறுதல் சொன்னார். இந்த காட்சி மைதானத்தில் இருந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.