நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக தொகுதி வாரியாக நிர்வாகிகளை அழைத்து அண்ணா அறிவாலயத்தில் கருத்து கேட்கப்பட்டது.
தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் அடங்கியஒருங்கிணைப்பு குழு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்தை கேட்டறிந்தது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம்நேற்றுடன் நிறைவடைந்தது. கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்த ஆலோசனை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்டமாக திமுக போட்டியிடும் தொகுதிகளில் யார்-யாரை வேட்பாளராக நிறுத்தலாம். இவர் இல்லை என்றால் இவர் என்ற அடிப்படையில் ஒரு தொகுதிக்கு 3 பேரின் பெயரை தெரி்வு செய்து உத்தேச பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த பட்டியல் முதல்வர் தமிழகம் திரும்பியதும் அவரிடம் ஒப்படைக்கப்படும். அவர் இறுதி வேட்பாளர் பட்டியலை உறுதி செய்வார்.
அத்துடன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் 19 தொகுதிகளின் பட்டியலையும் தயார் செய்து விட்டனர். அதுவும் முதல்வர் வந்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.