Skip to content

மதுரையில் 1ம் தேதி திமுக பொதுக்குழு- ரோடு ஷோ நடத்துகிறார் முதல்வர்

மதுரை உத்தங்குடியில்  வரும் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதற்காக பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.   அதற்கு கலைஞர்  திடல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில்   சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட 4 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள். ஆனால் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. . ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் உணவருந்த தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டு வருகின்றது. இவை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட உள்ளது. மழை, காற்று, வெயிலால் எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும் உள்ளரங்க அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு  உள்ளது.  கூட்ட அரங்கத்தின் முன்பாக 100 அடி உயரத்தில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.  அந்த கம்பத்தில்  முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றி வைத்து விட்டு அரங்கத்திற்குள் செல்வார். அதைத்தொடர்ந்து  பொதுக்குழு கூட்டம் தொடங்கும்.  பொதுக்குப அரங்கின்  முகப்பு பகுதி ‘அறிவாலயம்’ போல வடிவமைக்கப்பட்டு  உள்ளது.
பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள் பங்கேற்பாா்கள். இவர்களது வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கும் இடவசதி தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கட்சி விதிகளில் புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படஉள்ளது. தணிக்­கைக்­குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.வருகிற  சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தியே இந்த   பொதுக்குழு  கூட்டப்பட்டுள்ளது. மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதால் மதுரை நகரமே திமுக கொடிகளால்  அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் மூர்த்தி,  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

கடந்த 1977-ம் ஆண்டு மே 15 ம் தேதி மதுரை செல்லூர் நந்தவனம் பகுதியில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக‌  பேராசிரியர் அன்பழகன், பொருளாளராக சாதிக் பாட்சா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 48 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் மீண்டும் இப்போது திமுக  பொதுக்குழு  நடைபெறவுள்ளது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு வெளியே நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுக்குழு தொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  வெளியிட்டுள்ள  அறிவிப்பில்  கூறியிருப்பதாவது:   தலை­வர் மு.க.ஸ்டாலின் தலை­மை­யில் வருகிற 1ம் தேதி(ஞாயிற்­றுக்­கி­ழமை) காலை 9 மணி­ய­ள­வில் திமுக பொதுக்­கு­ழுக் கூட்­டம் மதுரை, உத்­தங்­குடி, “கலை­ஞர் திட­லில்” நடை­பெ­றும். அது­போது பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் தவ­றாது கலந்து கொள்­ளு­மாறு கேட்­டுக் கொள்­கி­றேன். கூட்டத்தில் கட்சியின் ஆக்­கப்­ப­ணி­கள் குறித்து விவாதிக்கப்படும்.
தணிக்­கைக்­குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். திமுக பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில் கலந்து கொள்ள வரும் அந்தந்த மாவட்­டத்­திற்­கு உட்­பட்ட பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், மாநில நிர்­வா­கி­கள் -அணிகளின் அமைப்பாளர்கள் ஆகி­யோர் கூட்­டம் நடை­பெ­றும் அரங்­கத்­திற்கு வெளியே தங்­கள் மாவட்டத்தின் பெயர் பொறித்­துள்ள கவுண்­ட­ரில் வைத்­துள்ள ‘மினிட்’ புத்­த­கத்­தில் கையொப்­ப­மிட்டு, தங்களுக்குண்டான ‘பேட்ஜ்’ஐ பெற்­றுக் கொண்டு, காலை 9 மணிக்­குள் பொதுக்­குழு நடை­பெ­றும் கூட்ட அரங்­கத்­திற்­குள் மாவட்ட வாரியாக அமர்ந்­திட வேண்­டு­மென கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பொதுக்குழுவில்  பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் நாளை மதுரை வருகிறார். அதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலையின் இருபுறங்களில் தி.மு.க. கொடி அமைக்கபட்டுள்ளது.  நாளை முதல்வர் மதுரையில் ரோடு ஷோ நடத்துகிறார்.  சுமார் 20 கி.மீ. தூரம் இந்த ரோடு ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   நாளை விமான நிலையத்தில் இருந்து வரும் முதல்வர், வில்லாபுரம், ஹவுசிங் போர்டு, ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், சுந்தரராஜபுரம், டி.வி.எஸ்., பாலம், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் சிக்னல், ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வழியாக சென்று ஆரப்பாளையத்தில்  அமைக்கப்பட்டுள்ள முன்னாள் மேயர் முத்து வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு கார் மூலம் செல்லும் முதல்வரை சுமார் 20 கி.மீ. தூரம் ரோடு ஷோவாக  அழைத்து செல்ல  மதுரை திமுக ஏற்பாடு செய்துள்ளது.  6 சட்டமன்ற  தொகுதிகளின் வழியாக இந்த ரோடு ஷோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
error: Content is protected !!