பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை (மே 8) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் நடந்தன. மொத்தம் 8.27 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்.6 முதல் 20ம் தேதி வரை நடந்தது. பொதுத் தேர்வுகள் தேதி அறிவிப்பின்போதே, தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நடந்து, தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. புதிய அரசு பதவியேற்பதில் இழுபறி நீடிக்கிறது. புதிய அரசு பதவியேற்ற பின், அரசின் அனுமதி பெற்று, தேர்வு முடிவுகளை வெளியிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகவும், இதன் காரணமாக, நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது என்றும் தகவல் வெளியாகின.
ஆனால், திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப்பயன்படுத்தி tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இவை தவிர, மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
