அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர் வீடுகளில் கடந்த13ம் தேதி அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சென்னையில் அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியபோது செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் டார்ச்சர் செய்தனர். இதில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடந்த உடல் பரிசோதனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் உள்ளது. உடனே ஆபரேசன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்ற வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு கோர்ட்டும் ஒப்புதல் வழங்கியதால் செந்தில் பாலாஜி சென்னை காவேரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இன்று இருதய ஆபரேசன் நடந்தது.
அமைச்சர் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறையினர் உச்சநீதிமனறத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய கோடைகால சிறப்பு அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜாகி செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும்போது, ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்வது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது என வாதிட்டார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பிறகு ஆட்கொணர்வு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்? அமலாக்கத்துறை ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்திருக்கக் கூடாது என்று ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவறாக நடந்துள்ளது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியது அதிருப்தி அளிக்கிறது . மருத்துவமனையில் உள்ளபோது மருத்துவர்கள் கருத்தை கொண்டு தான் விசாரணை நடத்த முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுத்ததாக கருதுகிறோம் . தற்போதைய நிலையில், உயர்நீதிமன்றம் விசாரணையை தொடர்வது தான் சரியாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் இருக்கும்போது அவரை காவலில் எடுக்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இறுதியில் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்த பின் சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றியது தொடர்பான அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவையும், ஆட்கொணர்வு மனுவுக்கு தடை கோரிய மனுவையும் ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கும் உரிமையை யாரும் மறுக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.