Skip to content
Home » அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு…. உச்சநீதிமன்றம் அதிரடி

அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு…. உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Senthil

அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு மூன்று முறை அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. ஒரு குறிப்பிட்ட நபருக்கு இதுபோல் தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்குவது அமைப்பின் தந்திரத்தை பாதிக்கும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பதவி உயர்வின் மூலம் நிரப்பக் கூடிய பதவி இல்லை என்பதால், பதவி நீட்டிப்பு யாருடைய வாய்ப்பையும் பறிப்பதாகக் கருத முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.அப்போது, ஒரு குறிப்பிட்ட நபரின் பதவிக் காலத்தை மீண்டும் மீண்டும் நீட்டிப்பதன் காரணம் என்ன? அந்த ஒரு நபரால் மட்டுமே அந்த பதவிக்குரிய கடமையை செய்ய முடியுமா? வேறு யாராலும் செய்ய முடியாதா? அவர் ஓய்வு பெற்ற பிறகு அந்த பதவியின் நிலை என்னாகும்? என அடுக்கடுக்காக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, “அமலாக்கத் துறை இயக்குநராக இருக்கும் சஞ்சய் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது” என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதில்  மிஸ்ராவுக்கு தொடர்ந்து 3 முறை வழங்கப்பட்ட  பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு பதவி உயர்வு வழங்கியது சட்டவிரோதம். எனவே அவர்   வரும் 31ம் தேதியுடன்  ஓய்வு பெற்றுவிட வேண்டும் எனவும்  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மிஸ்ரா உ.பி.யை சேர்ந்தவர். தற்போது 62 வயது ஆகிறது. 1984ம் ஆண்டு ஐஆர்எஸ்  பணியில் சேர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!